சென்னை: சென்னை – தூத்துக்குடி இடையில்  ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், மக்களின் நலன் கருதி மேலும் புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என மக்களவையில்  தூத்துக்குடி  திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை வைத்தார்.

சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெரிசலை தடுக்க ஒன்றிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பினார். அப்போது,   தமிழ்நாட்டின் மிக முக்கிய வணிக நகரமான தூத்துக்குடியில் இருந்து தலைநகரம் சென்னைக்கு அன்றாடம் முத்து நகர் விரைவு வண்டி ஒரு இரயில் மட்டுமே ஓடுகிறது.

இதனால், அதில் கூட்டம் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், மேலும் அதிகரிக்கும் வணிக தொடர்புகளை கருத்தில்கொண்டும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா விரைவு வண்டி வழித்தடத்தில் புதிய விரைவு வண்டி இரயிலை அறிமுகப்படுத்த வேண்டும் என  கோரிக்கை விடுத்தார்.

மேலும்,   தூத்துக்குடியிலிருந்து குருவாயூர் மற்றும் நாகர்கோவில் விரைவு வண்டிகளை இணைக்கும் இணைப்பு பயணிகள் இரயில்களை அரசாங்கம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதா என்றும் ஏற்கனவே கோரிக்கை  வைத்ததுடன்,  சென்னை தூத்துக்குடி இடையில் வந்தே பாரத் விரைவு வண்டியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டுமிட்டுள்ளதா எனவும்  கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் , சென்னை- தூத்துக்குடி பிரிவில் தற்போது வண்டி எண்: 12693/12694 சென்னை எழும்பூா்- தூத்துக்குடி போ்ல் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி சேவையாக இயக்கப்படுகிறது. மேலும், பயணிகளுக்கு வசதியாக, இணைப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, வண்டி எண்: 56724/56723 வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி பயணிகள் ரயில், வ.எண்: 16127/16128 சென்னை எழும்பூா் குருவாயூா் எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. வண்டி எண்: 56725/56726 தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில், வண்டி எண்: 22667/22668 நாகா்கோவில் -கோயம்புத்தூா் எக்ஸ்பிரஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தவிர, வந்தே பாரத் ரயில் சேவைகள் உள்ளிட்டட ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது இந்திய ரயில்வேயில் நடந்து வரும் செயல்முறையாகும். இது போக்குவரத்து நியாயப்படுத்தல், செயல்பாட்டு சாத்தியக்கூறு, ஆதர வளங்களின் கிடைக்கும் தன்மை போன்றவற்றுக்கு உள்பட்டதாகும்  என தெரிவித்துள்ளார்.