சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:=
புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் மற்றும் 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக (School Ambassador) நியமிக்கப்படுவார்கள்.
ஆசிரியர்களின் வகுப்பறைப் பயன்பாட்டிற்கு கைப்பிரதிப் பாடநூல் வழங்கப்படும். மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் நவீன தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்ளவும் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் திறன் என்னும் முனைப்பு இயக்கம் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்ககள் மேம்படுத்தப்படும்.
கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குக் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.
அரசுப் பள்ளி மாற்றுத்திறன் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்த தகுந்த விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்பட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளுக்கும் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் ரூ. 4.60 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
குழந்தைநேய திறன்மிகு வகுப்பறைக்கு ரூ. 25 கோடி மதிப்பீட்டில் தளவாடப் பொருள்கள் வழங்கப்படும்.
மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்திட 1,25,000 ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.
தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி ரூ. 4.94 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மொழிபெயர்க்கப்படும்.
மூத்த வரலாற்று அறிஞர்களின் அரிய தமிழ்நாட்டு வரலாற்று நூல்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.
அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் ரூ.50 வழங்கப்படும் லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.
பெரியார் குறித்த இலக்கியப் பதிவுகள் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பாக வெளியிடப்படும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக் கூடம் அமைக்கப்படும்.
நூலகக் கட்டடங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு செய்யப்படும்
இவ்வாறு ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.