சென்னை
கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை 4 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இரண்டாம் அலை கொரோனா பரவலில் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,659 பேர் பாதிக்கப்பட்டு நேற்று வரை 10,81,988 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 13,557 பேர் மரணம் அடைந்து 9,63,251 பேர் குணம் அடைந்து தற்போது 1,05,180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
எனவே கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டு இன்று காலை 4 மணி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மதுக்கூடங்கள், கேளிக்கை கூடங்கள் மற்றும் கூட்ட அரங்குகள் இயங்க அனுமதி இல்லை எனவும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை என அறிவித்துள்ள நிலையில், காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகளில் குளிர்சாதன வசதி இன்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மளிகைக் கடைகள் காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றிச் செயல்படலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இயங்கும் அழகுநிலையங்கள், முடிதிருத்தகங்கள் செயல்பட அனுமதி இல்லை என அறிவித்துள்ள தமிழக அரசு, உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், அமர்ந்து உண்ண அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது எனவும், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்துக்குப் புதுச்சேரி தவிர்த்துப் பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் வருபவர்கள், இ-பதிவு முறையில் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,
வாடகை டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டும் பயணிக்கலாம் எனவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இருவர் மட்டுமே பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது தமிழகத்தில் அமலில் உள்ள இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.