சென்னை: தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றதால் அவருக்குப் பதில் மீண்டும் ஒரு பொறுப்பு டிஜிபி-யை நியமிப்பதா என தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசு இதுவரை டிஜியை நியமிக்காத நிலையில், பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மனஅழுத்தம் காரணமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், புதிய பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்  செய்யப்பட்டு உள்ளார். இது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின்  கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,, “போலீஸ் துறையின் மாண்பை சீர்குலைக்கும் பொறுப்பு துறப்பு முதல்வர் மு.க. ஸ்டாலின். ஏற்கெனவே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும், காவல்துறையின் கண்ணிய மரபுகளையும் மீறி மாநிலத்தின் உயர்ந்த டிஜிபி பதவிக்கு பொறுப்பு டிஜிபியை, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நியமித்தார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போதே இதற்கு தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து, நிரந்தர டிஜிபியை நியமனம் செய்ய வலியுறுத்தினோம்.

இந்த நிலையில்… இப்போது போலீஸ் துறையின் மாண்பை மீண்டும் கேள்விக்குறியாக்கும் வகையில், பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றதால் மீண்டும் ஒரு பொறுப்பு டிஜிபி-யை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.

போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் இப்படி பொறுப்பற்று நடந்து கொள்வது காவல்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்!

கேட்டால் உத்திரபிரதேசத்திலும் பொறுப்பு டிஜிபி தான் என்கிறார்கள். அப்படி என்றால் பாஜக வழியில் தான் நாங்களும் போலீஸ் ராஜ்ஜியம் நடத்துகிறோம் என ஒப்புக் கொள்கிறாரா முதல்வர் ஸ்டாலின்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

வெங்கட்ராமன் விடுமுறை: பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்! தமிழக அரசு.

[youtube-feed feed=1]