சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்ற நாளில், மின்தடை காரணமாக தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்த நிலையில், நீட் தேர்வு முடிவு வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், மின்தடையால் எந்தவித பாதிப்பும் இல்லை. அதனால், நீட் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவப் படிப்பிற்காக நீட் நுழைவுத் தேர்வு (இளநிலை) 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு தேவை என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை எனவும் மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. மேலும் இதுகுறித்து என்டிஏ பதில் அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்தமுடியாது என மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து இந்த வழக்கில்,, வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.