டெல்லி: நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் செலுத்தும் அவகாசம் இன்று மதியதுடன் முடிவடைந்த நிலையில், நாளை இரவு 11.30 மணி வரை அவகாசம் வழங்கி தேசிய தேர்வு வாரியம் (என்டிஏ) அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புப்பான நுழைவுத் தேர்வான நீட் 2021 தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது.
நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் (ஜூலை) 13 மாலை முதல் ஆகஸ்டு 10ந்தேதி வரை நடைபெற்றது. பின்னர், நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இன்று (ஆகஸ்ட் 14ஆம் தேதி) மதியம் 2 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசம் நாளை (ஆகஸ்ட் 15) இரவு 11.50 வரை நீட்டிக்கப்படும் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
இதுகுறித்து என்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மாணவர் சமுதாயத்தின் தொடர்ச்சியான கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசம் நாளை (ஆகஸ்ட் 15) இரவு 11.50 வரை நீட்டிக்கப்படும். ஏற்கெனவே நீட் 2021 தேர்வுக்கு விண்ணப்பித்து, கட்டணத்தைச் செலுத்த முடியாத மாணவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும்.
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இனி மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் வசதி முடிவடைந்த பின்பு, என்டிஏ நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]