குவாங்சோ:
சீனாவில் இருந்து 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டதாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாரஷ்டிரா , டெல்லி , தமிழகம் மாநிலங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இதுவரை பி.சி.ஆர் முறையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் வருவதற்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் 15 நிமிடத்தில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா , இல்லயா என்பதை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தனர். உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், இந்த கருவியின் பயன் அதிகமாகி இருக்கிறது.

அதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பி-787 விமானம் சீனாவின் குவாங்சொய் மாகாணத்துக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில், 3 லட்சம் ரேபிட் கருவிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.