டெல்லி:

கடந்த சில வாரங்களாக விப்ரோ, இன்போசிஸ், கோக்னிசன்ட் உள்ளிட்ட ஐ.டி நிறுவனங்களில் இந்த ஆண்டு 50 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து நாஸ்காம் தலைவர் சந்திரசேகர் கூறுகையில்,‘‘ஐ.டி துறையில் பெரிய அளவில் பணிநீக்கம் என்பதை மறுக்கிறோம். 2017ம் நிதியாண்டில் மட்டும் 1.7 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னணி 5 நிறுவனங்களில் க்யூ 4ல் மட்டும் அதிகளவில் 50 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சைபர் பாதுகாப்பு, அனலிடிக்ஸ், ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் உள்ளிட்ட புதிய தொழில்நுடபங்களை நோக்கி உலகம் செல்கிறது. அதற்கு ஏற்ப பணியாளர்கள் தங்களது திறனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘டெக் ஸ்டார்ட் அப்ஸ், இ காமர்ஸ், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பேமன்ட்ஸ் உள்ளிட்ட துறைகைளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிறது. 2025ம் ஆண்டிற்குகள் 30 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். ஐடி நிறுவனங்கள் தங்களது ஆண்டு செயல்பாட்டை மதிப்பிடுவது வழக்கமான பணி. அப்போது மோசமான செயல்பாடு காரணமாக பலர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

இந்த ஆண்டு இதில் அதிக வேறுபாடு இல்லை. வழக்கமாக 0.5 முதல் 3 சதவீதம் வரை இந்த பணிநீக்கம் இருக்கும். இந்த ஆண்டும் இந்த அளவில் மாற்றமில்லை. போட்டியை எதிர்கொள்ள சரியான திறன் கொண்ட அமைப்பை ஐடி நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும். ஆனால், எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பணிநீக்கம் இவ்வளவு பெரிதுபடுத்தப்படுவது ஏன் என்று தெரியவில்லை’’ என்று தெரிவித்தார்.

பெரும் அளவிலான பணிநீக்கம் ஐடி துறையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த துறை பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் விசா பிரச்னை வேறு எழுந்துள்ளது.

நாஸ்காம் தலைவர் ராமன் ராய் கூறுகையில், ‘‘ புதிய தொழில்நுட்பத்திறகு ஏற்ப ஊழியர்களுக்கு தகுதி ஏற்படுத்தும் நோக்கத்தோடு பயிற்சி மற்றும் திறன் புதுப்பித்தல் போன்றவற்றுக்காக நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்கிறது. ஐடி துறையில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்ற சூழலுக்கு ஏற்ப விரைந்து செயல்படும் நோக்கத்தில் தான் இந்த முதலீடு செய்யப்படுகிறது’’ என்றார்.