மதுரை: கூட்டணியைக் கையாள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணிக்காக, மாநலி தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டு, முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்து பாஜகவுக்கு தாவிய நயினார் நாகேந்திரனை பாஜக தலைமை கட்சி தலைவராக நியமனம் செய்தது. இதையடுத்து அண்ணாமலை கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளார். நயினார் நாகேந்திரன் தலைமையில் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவானது. ஆனால், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், சசிகலா உள்பட அதிமுக கூட்டணி கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.
இதனால் அதிமுக மூத்த தலைவர்கள் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், எடப்பாடிக்கு 10நாள் கெடு விதித்துள்ளார். இதையடுத்து அவரையும் கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி நடவடிக்கை எஎடுத்துள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை என்று நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும். அண்ணாமலைதான், பாஜகவுடன் அமமுகவை கூட்டணி அமைக்க முழு முயற்சி எடுத்தவர். அவரால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம், ஒன்றாக செயல்பட்டோம். அண்ணாமலை தலைவராக இருந்தவரை கூட்டணியை நல்ல முறையில் கொண்டு சென்றார். ஓ. பன்னீர்செல்வமும், நானும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தோம்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்காதது குறித்து நயினார் நாகேந்திரன் அளித்த பதில் ஆணவமானது. நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை சரியாகக் கையாளத் தெரியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படி சொல்ல முடியும்? கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு பாஜக காரணமல்ல, தொண்டர்களின் முடிவால் வெளியேறினோம். நிதானமாக எடுத்த முடிவுதான் இது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 2026 தேர்தலில் எங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. மூப்பனார் நினைவிட நிகழ்ச்சிக்கு ஜி.கே. வாசன் அழைப்பு விடுத்திருந்தாரே தவிர, வேறு யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. தேஜ கூட்டணியில் அமமுக மீண்டும் இணைய வேண்டும் என்றால், ஒரு நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும். அது என்ன வென்றால், எதைச் செய்ய வேண்டுமோ, அதை செய்யுங்கள் என கூறினார்.
மேலும், அண்ணன் பழனிசாமி என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எடப்பாடி பழனிசாமி அண்ணன்தான் என்று பதிலளித்தார்.