நாகநாதர் திருக்கோயில், பரமக்குடி அருகிலுள்ள நயினார் கோயில், ராமநாதபுரம் மாவட்டம்.

தல சிறப்பு :
சர்வமத வழிபாட்டுத் தலமாக இருப்பது சிறப்பு.
பொது தகவல் :
இங்கு சிவன், பார்வதி, முருகன், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், ஒரே சன்னதியில் மூன்று விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.
தலபெருமை :
உலகில் எத்தனையோ சிவாலயங்கள் இருந்தாலும் 1008 சிவாலயங்கள் மிகுந்த தெய்வீகத்தன்மை உடையது என்கிறார் புராணங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்த சூதமுனிவர் அந்த ஆயிரத்தெட்டு கோயில்களும் மகாமண்டல புருஷன் எனப்படும் உலக நாயகனுக்கு ஒவ்வொரு அங்கமாக விளங்குகிறது. அதில் இதயமாகத் திகழ்வது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள நயினார் கோயில் இங்குள்ள நாகநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் சவுந்தர்யநாயகி அம்பாளுக்கு ஆடிப்பூர திருவிழா விசேஷம் இந்த இதயத்தலம் சர்வமத வழிபாட்டுத் தலமாக இருப்பது விசேஷம்.
முஸ்லிம் பெண்ணுக்கு அருள் : முஸ்லிம் சாம்ராஜ்ய காலத்தில் முல்லாசாகிப் என்பவர் வடக்கே இருந்தார் அவரது மகளுக்கு பேச்சு வரவில்லை. தெற்கிலுள்ள ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வணங்கினால், இப்பிரச்னை தீரும் என சிலர் சொல்லவே அங்கு வந்தார். ஆனால், அங்கும் பிரச்னை தீரவில்லை. அங்கிருந்து மருதமரங்கள் அடங்கிய வனத்தின் வழியே வந்து, இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் அவர்கள் நீராடினர். அப்போது, அந்தப் பெண் நயினார் என கத்தினாள். நயினார் என்றால் தலைவர். அவளுக்கு பேச்சு வந்து விட்டது. அவ்வூர் நாகநாதர் அருளாலேயே அவளுக்கு பேச்சு வந்ததாக முல்லாசாகிப் கருதினார். அன்று முதல் அவ்வூரின் பெயரும் நயினார்கோயில் என்றாயிற்று முஸ்லிம்கள் இங்குள்ள சவுந்தர்யநாயகி அம்மன் சந்நிதியில் எண்ணெய் பெற்றுச் செல்கின்றனர். சுகப்பிரசவம் ஆக கர்ப்பிணிகளின் வயிற்றில் இதைத் தடவுவதாகக் கூறுகின்றனர்.
புற்றடி பெருமை : இந்தக் கோயிலில் ராகு, கேது நாகதோஷம் உள்ளவர்கள் வணங்கினால் திருமணத்தடை, தொழில் தடை நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள புற்றடியில் நாகம் வசிப்பதாக சொல்கின்றனர். நாகத்திற்கு முட்டை, பால் கொடுக்கின்றனர். இந்த புற்றுமண்ணைப் பூசிக்கொண்டால் தீராத நோயும் தீரும் என்பர்.
சவுந்தர்யநாயகி சந்நிதி : கருணைக்கடலான சவுந்தர்யநாயகி அம்பாள் முகப்பொலிவைத் தருபவள். முகத்தில் பரு இருந்தால், அம்பாளுக்கு அடுப்புக்கரியை வைக்கோலில் சுற்றி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பரு, சருமநோய்கள் தீருமென நம்புகிறார்கள். இவளது சந்நிதிக்குள் ஒரு நீர்நிலை இருந்தது. தற்போது அது மூடப்பட்டுள்ளது. அந்த நீர்நிலையில் தண்ணீர் எப்போதும் வற்றாமல் ஒரே நிலையில் இருந்தது. அந்த புனிதநீரைப் பருகி நோய் தீர்ந்தவர்கள் அக்காலத்தில் இருந்தனர். இங்குள்ள வாசுகி தீர்த்தம் புனிதமானது. இதில் நீராடுவோர் சகலதோஷமும் நீங்கி செல்வவளம் பெறுவர்.
துலாக்கோல் போன்றவர் : இங்குள்ள நாகநாதர் துலாக்கோல் போன்று நீதி வழங்குபவர் என்பதால், இவர் முன்னால் பொய் பேச மக்கள் பயப்படுகின்றனர். பெண்களை ஏமாற்றுதல், கடன் வாங்கித் திருப்பித்தராமல் இருத்தல், குடும்ப பிரச்னைகளை நாகநாதர் முன்னிலையில் பேசித் தீர்க்கின்றனர். இவர் முன்பொய் சொன்னால் நாகம் வந்து மிரட்டும் என்பதால், சரியான தகவலைக் கொடுக்கின்றனர். விவசாயிகள் விளை பொருட்களை முதலில் இங்கு காணிக்கையாகக் கொடுத்த பிறகே பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில் இது.
தல வரலாறு :
சூரிய வம்சத்தில் பிறந்த திரிசங்கு என்னும் மன்னன், வயதான காரணத்தால் அரசபதவியை விட்டு, ஒரேநாளில் சொர்க்கம் சொல்ல விரும்பினான் தன் விருப்பத்தை குலகுற வசிஷ்டரிடம் கூறினான் அவர் ஒரு வருடமாவது யாகம் செய்தால் தான் சொர்க்கம் செல்ல முடியும் என்றார். இதை அவன் ஏற்கவில்லை. தன் கருத்தை மதிக்காத திரிசங்குவை புலையனாக மாறும்படி வசிஷ்டர் சபித்து விட்டார். தன் சாபம் நீங்க, அவன் வசிஷ்டருக்கு நேர் விரோதியான விஸ்வாமித்திரரை அணுகினான் திரிசங்கு பஞ்சாட்சர மந்திரமாகிய நமசிவாய மந்திரத்தை மனப்பூர்வமாக ஜெபிப்பதன் மூலமும், யாகம் ஒன்றை நடத்துவதன் மூலமும் ஒரே நாளில் சொர்க்கத்தை அடைய வகை செய்வதாக உறுதியளித்தார்.யாகத்தை நடத்த வரும்படி வசிஷ்டரின் ஆயிரம் புத்திரர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினார் சாபம் பெற்ற ஒருவனுக்காக யாகம் நடத்த வரமுடியாது என அவர்கள் கூறிவிடவே, தன் கருத்தை மதிக்காத அவர்களை வேடர்களாகும்படி சபித்து விட்டார். அவர்கள் சாபவிமோசனம் கேட்கவே, தெற்கேயுள்ள மருதூர் காட்டில் சிவபூஜை செய்து விமோசனம் பெறலாம் என்றார். அதன்படியே அவர்கள் அந்தக் காட்டிலுள்ள புனித தீர்த்தங்களில் நீராடியும், அங்கிருந்த நாகநாதரை வணங்கியும் சாப விமோசனம் பெற்றனர். பிற்காலத்தில் சவுந்தர்யநாயகி அம்பாளுக்கு சந்நிதி அமைக்கப்பட்டது.
திருவிழா :
அம்பாளுக்கு ஆடியில் 15 நாளும், சுவாமிக்கு வைகாசியில் 10 நாளும் பிரம்மோற்ஸவம் நடத்தப்படும் பிரதோஷம், சிவராத்திரி.
பிரார்த்தனை :
இந்தக் கோயிலில் ராகு, கேது நாகதோஷம் உள்ளவர்கள் வணங்கினால் திருமணத்தடை தொழில் தடை நீங்கும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன் :
முகத்தில் பரு இருந்தால், அம்பாளுக்கு அடுப்புக்கரியை வைக்கோலில் சுற்றி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள், பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சேவல் காணிக்கை செலுத்தியும், வெள்ளியாலான பொருட்களை காணிக்கையாக செலுத்தியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.