நாகை: நாகை கடற்கரையோரம் அமைந்துள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10நாள் ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இதையொட்டி, அங்கு பல ஆயிரம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இதையொட்டி, நாகை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி, இன்று விழா தொடங்குகிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று (29ம் தேதி) மாலை 6 மணிக்கு கொடியேற்றதுடன் தொடங்குகிறது. தஞ்சை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.  தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர்வாதம், தமிழில் திருப்பலி நடைபெற இருக்கிறது.

விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் , அருட்சகோதரரிகள் பங்குபெறுகிறார்கள். தொடர்ந்து திருவிழாவின்போது தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

இதையொட்டி, தமிழ்நாட்டின் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த சிலநாட்களாகவே  பாதயாத்திரையாக ஏராளமானோர் சென்றுகொண்டிருக்கின்றனர்.  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் நடைபயணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழியாக வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர். பலர் வேளாங்கண்ணி மாதா உருவம் பொறித்த கொடிகளை ஏந்தியும், திருவுருவச்சிலையுடன் கூடிய தேரை இழுத்துக்கொண்டும் செல்கின்றனர். அவ்வாறு வருவோர்அங்குள்ள மாதா சொரூபத்தை வழிபட்டு, இன்று கொடியேற்றத்தை கண்டு, பிரார்த்தனையில் பங்கேற்க முகாமிட்டு உள்ளனர்.

கோவில் திருவிழாவையொட்டி,  கடற்கரை சாலை, கடைவீதி, வேளாங்கண்ணி புனித அன்னை தேவாலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா  ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை திருவிழா நடைபெறும். 

கொடியேற்றம்:

ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும்.

மந்திரமாலை:
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று, மரியன்னைக்கு மந்திரமாலை சூட்டுவது.
மரியன்னைக்கு சிறப்பு திருப்பலிகள்:
ஒவ்வொரு நாளும் சிறப்பான திருப்பலிகள் நடைபெறும்.
சப்பர பவனி:
தினமும் இரவில், அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் அன்னை மரியாவின் திருவுருவ பவனி நடைபெறும்.
மாபெரும் மாதா பவனி:
திருவிழாவின் கடைசி நாளன்று, மாபெரும் மாதா பவனி நடைபெறும்.
மறைவு மற்றும் விண்ணேற்பு:
செப்டம்பர் 8 ஆம் தேதி, மரியன்னையின் மறைவு மற்றும் விண்ணேற்பு விழா நடைபெறும்.
இந்த நிலையில் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 வட்டங்களுக்கு  இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று ( 29-ம் தேதி)  விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து மாற்றம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) 2 நாட்கள் வேளாங்கண்ணியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு பஸ் வழித்தடம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூரில் இருந்து வரும் அனைத்து அரசு பஸ்களும் நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா, பாப்பாகோவில், பறவை, வேளாங்கண்ணி சுனாமி நினைவு வளைவு வழியாக உள்ளே சென்று செயின்ட் மேரிஸ் தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட வேண்டும். பின்பு அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பூக்காரத்தெரு, கொள்ளந்திடல் கிழக்கு தெரு, தெற்கு பொய்கை நல்லூர் வழியாக பறவை சென்று கிழக்கு கடற்கரை சாலை, புத்தூர் ரவுண்டானா வழியாக வெளியே செல்ல வேண்டும்.
தனியாா் பஸ்கள் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூரில் இருந்து வரும் அனைத்து தனியார் பஸ்கள் மற்றும் இலகு ரக வாகனங்களும் புத்தூர் ரவுண்டானா, கிழக்கு கடற்கரை சாலை, ஏறும் சாலை வழியாக ஒரத்தூர் பிரிவு சாலை வலது புறமாக திரும்பி செல்லவேண்டும். அங்கிருந்து வடவூர், நிர்த்தனமங்கலம், கிராமத்து மேடு, கருங்கண்ணி, மேலப்பிடாகை வழியாக இடது புறமாக திரும்பி திருப்பூண்டி, செருதூர் ஆற்றுபாலம் வழியாக செயின்ட் பீட்டர்ஸ் வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
பக்தர்கள் அங்கிருந்து பேராலயத்திற்கு சென்று மீண்டும் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும்.
ஆட்டோக்கள் இன்று(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை(சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து ஆட்டோக்களும் செருதூர் பழைய பாலத்திலிருந்து செருதூர் புதிய பாலம் வரை பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும்.
யாத்ரீகர்கள் நலன் கருதி இன்று முழுமையாக இரவு 12 மணி வரை எந்த விதமான வாகனங்களும் மெயின் ஆர்ச்சிலிருந்து ஆலயத்தினை சுற்றியுள்ள கடைகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் மற்ற இடங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
அவசர ஊர்தி ஆம்புலன்ஸ், போலீஸ்துறை, தீயணைப்புதுறை வாகனங்கள் சென்று வருவதற்கு பொதுமக்களும், பக்தர்களும் ஒத்துழைப்பு தர போலீசார் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாளை (சனிக்கிழமை) காலை வரை சரக்கு வாகனங்கள் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்து செல்லாமல், வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் திருப்பூண்டி, மேலப்பிடாகை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாருர், கங்களாஞ்சேரி, நாகூர் வழியாக செல்ல வேண்டும்.
சரக்கு வாகனங்கள் நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் நாகூர், கங்களாஞ்சேரி, திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக செல்ல வேண்டும்.
சென்னையில் இருந்து வேதாரண்யம் செல்ல வேண்டிய அனைத்து சரக்கு வாகனங்களும் வாஞ்சூர் சந்திப்பு, திருவாரூர், கங்களாஞ்சேரி வழியாக செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.