சென்னை: பங்குனி பெருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 1-ம் தேதி வரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவை (23.03.2026 – 01.04.2026) முன்னிட்டு, போக்குவரத்துச் சீரான முறையில் நடைபெறுவதையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில், தேவைக்கேற்ப ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளிலும் R.K. Mutt சாலையிலும் போக்குவரத்துத் திசைதிருப்பல்கள் அமல்படுத்தப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

10நாட்கள் கோலாகலமாக நடைபெறும் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் 2026 ஆம் ஆண்டு பங்குனிப் பெருவிழா மார்ச் 23ஆம் தேதி காலை 6:20 மணி முதல் 6.50 மணி வரை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
முன்னதாக, மார்ச் 22ஆம் தேதி திருமயிலையின் காவல் தெய்வமாக விளங்கும், கிராம தேவதையான கோலவிழி பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூச்சொரிதல் சிறப்பாக நடைபெற்றது.
முதல் நாள் (23.3.2026) திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் ஸ்வாமி வருடாந்திர பங்குனி பிரம்மோற்சவம் நடைபெற்றது. இரவு சுவாமி பிரியாவிடை அம்மனுடன் மயிலுருவில் சிவபூஜை செய்யும் திருக்கோலத்தில் புன்னை மர வாகனத்திலும், அம்பாள் கற்பக விருட்ச வாகனத்திலும், ஶ்ரீ சிங்கார வேலஸ்வாமி வேங்கை மர வாகனத்திலும், ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
மார்ச் 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். பங்குனித் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 24 காலை சூரிய வாகனம் மற்றும் பல வாகனங்களில் இறைவன் வீதி உலா, மயிலை மாட வீதிகளில் மிகவும் கோலாகலமாகத் தொடங்கியது. உலா நாட்களில் மாலை நேரங்களில் விடையாற்றி கலை நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெறுகின்றன. இவ்விழாவில் மார்ச் 25 அதிகாலை 6:00 மணிக்கு அதிகார நந்தியின் வீதியுலாவும், அதைத் தொடர்ந்து கந்தர்வன், கந்தர்வி, மூஷிகம், வெள்ளி விடை வாகனங்கள் புறப்பாடும், திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழாவும் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்சசியாக மார்ச் 29ஆம் தேதி தேரோட்டமும், மார்ச் 30ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் வீதி உலாவும் நடைபெறும். இதையடுத்து, ஏப்ரல் 1ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இவ்விழாவில் தினமும் காலை, இரவு இரண்டு நேரமும் வாகன சேவைகள் நடைபெறும்.
தேரோட்டம் மற்றும் அறுபத்து மூவர் (63) விழாவின் பொழுது மயிலாப்பூர் 4 மாடவீதிகளில் கூட்ட நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும். தேரோட்டத்தன்று தேர் ஒய்யாரமாக ஆடி அசைந்து வரும் அழகைக்காண லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஒவ்வொரு வருடமும் பங்குனித் திருவிழாவை காவல்துறை அதிகாரிகள் மிகச்சிறப்பாக முன்கூட்டியே திட்டமிட்டு, மாடவீதிகளில் போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளனர்.
பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, அடுத்த மாதம் 1-ம் தேதி வரை பக்தர்களின் வருகை எண்ணிக்கைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர். குறிப்பாக, கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியும், அதன் போக்குவரத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது.
மேலும், கோயில் அருகே பக்தர்களின் வசதிக்காக வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
