சென்னை: தமிழ்நாட்டில், கொலைகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இன்று பட்டப்பகலில் காரைக்குடி பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், இனிமேல் கொலை சம்பவங்கள் நடைபெறாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில், கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க காவல்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதை மீறி இன்று மேலும் ஒரு கொலை சம்பவம் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்றுள்ளது, இது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கின் நிலைமையை தோலூரித்து காட்டியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் மனோஜ் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் மனோஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற மனோஜின் நன்பர்கள் இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவத்தில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் படுகாயம் அடைந்த மனோஜின் நண்பர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பிச் சென்ற மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.