சென்னை: சுப முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தமிழ்நாடு அரசு அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துள்ளது.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் .முகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதிநாட்கள் விடுமுறையை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்கூறியிருப்பதாவது,
11/07/2025 (வெள்ளிக் கிழமை), 12/07/2025 (சனிக்கிழமை), 13/07/2025 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 11/07/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 360 பேருந்துகளும், 12/07/2025 (சனிக்கிழமை) 415 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 11/07/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும், 12/07/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேமுற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை மாதாவரத்திலிருந்து 11/07/2025 மற்றும் 12/07/2025 அன்று 20 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மேலும் , ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த பயணிகள்
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8,374 பயணிகளும், சனிக்கிழமை 3,312 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,319 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.