சென்னை: பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள களத்தில் 22,000 பணியாளர்கள் இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில், பருவமழை பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 22,000 பேர் களத்தில் உள்ளனர். பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள், 500 டிராக்டர்கள், 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.

பருவமழை என்றலே சென்னை மாநகர மக்களின் வயிற்றில் புளியை கரைப்பது வாடிக்கையாகவே உள்ளது. ஆனால், திமுக அரசு பதவி ஏற்றதும் ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து, மழைநீர் வடிகால் பணிகள், தாழ்வான பகுதிகள் சீரமைப்பு என பல்வேறு பணிகளை செய்தது. இருந்தாலும், மழை பாதிப்பு இதுவரை சரி செய்யப்படவில்லை. சாதாரண மழைக்கே சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்குவது வாடிக்கையாகவே உள்ளது. ஆனால், அரசு உடனடியாக ஆட்சிகளையும், இயந்திரங்களையும் இறக்கி மழைநீரை அகற்றி வருகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது. மேலும் மெட்ரோ பணிகளும் நடைபெற்று வருவதால், சாலைகளில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நிலையில், பருவமழை காரணமாக மக்கள் வாழும் பள்ளமான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவும் காணொலி காட்சி வாயிலாகவும் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், சென்னையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 17ம் தேதி 179.80 மி.மீ. மழை பெய்த நிலையில், 23ம் தேதி சராசரியாக 17.94 மி.மீ. மழை பெய்துள்ளது. மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்திடும் நோக்கில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு சுகாதார வசதி, குடிநீர் வசதி முதலியவை செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 22 மற்றும் 23ம் தேதி 1,48,450 பேருக்கு காலை உணவும், 2,23,950 பேருக்கு மதிய உணவும் 28,000 பேருக்கு இரவு உணவும் என மொத்தம் 4 லட்சத்து 400 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
150 எண்ணிக்கையில் 100 குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. டிராக்டர் மேல் 500 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணிற்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான புகார்களை 1916 என்ற உதவி எண்ணிற்கும் 24 மணி நேரமும் கட்டணமில்லாமல் தெரிவித்து தேவையான உதவிகளைப் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கைகளை எடுக்க சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர் வாரியம் 2,149 களப்பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு 454குடிநீர் வாகனங்கள் மூலம் 23ம்தேதி வரை 3181 நடைகள் வாயிலாக தடையில்லாமல் குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.