டெல்லி: பிரதமர் மோடியின் நடவடிக்கை குறித்து அவ்வப்போது விமர்சனம் செய்து வரும் பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணியன் சுவாமி மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெறாததால் மோடி பதவி விலக வேண்டும், அவருக்கு இனி பிரதமர் அலுவலகத்தில் வேலையில்லை  என போர்க்கொடி தூக்கி உள்ளார். இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறாததால் மோடி பதவி விலக வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக தலைமையில் அமையவுள்ள புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாக அமையவுள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி 293  இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால், அதிக இடங்களை கைப்பற்றி உள்ள பாஜக  கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல்முடிவுகள் மற்றும் பாஜகவின் பின்னடைவு குறித்து  கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி; பிரதமர் அலுவலகத்தில் இனி மோடிக்கு வேலையில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை மக்கள் புறிக்கணித்துள்ளனர். பா.ஜ.க. 240 இடங்களில் மட்டுமே வென்று பெரும்பான்மை பெறாததால் மோடி பதவி விலக வேண்டும். பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு இனி வாய்ப்பில்லை. சுயமரியாதை உள்ள எந்த தலைவரும் கண்டிப்பாக ராஜினாமா செய்துவிடுவர்; பதவி நீக்கும் வரை காத்திருக்க மாட்டார்கள்.

மோடி, இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை  வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், பிரதமர் மோடி தோல்வி பயத்தால் தேவையில்லாத  தேர்தல் பிரசாரத்தின்போது, பல விஷயங்களை பேசியதாகவும் குற்றம் சாட்டினார்.

சுப்பிரமணியசாமியின் பேச்சு பாஜக கட்சி தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.