முன்னாள் தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றதாலும், அருண் கோயல் சமீபத்தில் ராஜினாமா செய்ததாலும், தேர்தல் கமிஷனில் இரண்டு தேர்தல் கமிஷனர் பதவிகள் காலியாக உள்ளன.

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான கூட்டம் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்றது.

பிரதமர் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு, தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் செயல்முறை குறித்து கேள்விகளை எழுப்பிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேர்தல் ஆணையர்களின் பெயர்களை அரசாங்கம் ஏற்கனவே இறுதி செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

சுக்பீர் சந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோரின் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். புதிய தேர்தல் ஆணையர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.

அரசு யாரை விரும்புகிறதோ அவர்தான் தேர்தல் ஆணையராக வருவார், அரசாங்கத்திற்கு குழுவில் பெரும்பான்மை உள்ளது இதன் காரணமாக அரசாங்கம் தனக்கு விருப்பமான பெயர்களை முடிவு செய்யலாம் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இவ்வளவு பெரிய பதவிக்கு இந்த முறையில் நியமனம் செய்யக்கூடாது. கூட்டத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு எனக்கு ஆறு பெயர்கள் வழங்கப்பட்டன, எனவே, இவ்வளவு குறுகிய நேரத்தில் நான் என்ன சொல்வேன்?

கூட்டத்திற்கு முன், புதன்கிழமை, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் குறித்த ஆவணங்கள் மற்றும் தகவல்களைக் கேட்டு சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

நேற்று தனக்கு 212 பெயர்கள் வழங்கப்பட்டதாகவும், இன்று 10 நிமிடங்களுக்கு முன் கூட்டத்தில் 6 பெயர்கள் முடிவு செய்யப்பட்டதாகவும், அவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

அந்த இருவரை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கும் மோடி அரசின் முடிவை தான் ஏற்கவில்லை என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

புதிய விதிகளின்படி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், கேபினட் அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவால் தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் தலைமையிலான குழுவிடம் 6 பெயர்கள் அடங்கிய பட்டியலை சட்ட அமைச்சகம் சமர்ப்பித்தது, அதில் இரண்டு பெயர்களை அறிவிக்கலாம். தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களைத் தவிர வேறு எந்த அதிகாரியையும் நியமிக்க இந்தக் குழுவுக்கு உரிமை உண்டு.

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான இந்த புதிய சட்டத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும் என ஏடிஆர் கோரிக்கை விடுத்துள்ளது. ADR மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.