சென்னை: பொங்கல் தொகுப்பில் பரிசு பணத்தை காணவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு,  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் உடன் முழுக ரும்போடு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. அரிசி ரேசன் அட்டைதாரர்கள் மட்டுமின்றி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து  முன்னாள் முதல்வரும், தற்போதைய  எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் சமுக வலைதளத்தில் டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘ பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும்,முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம்,கரும்பை காணவில்லை,

தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு,தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.

அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் முழுக்கரும்பும் உண்டு! அமைச்சர் சக்கரபாணி தகவல்..