சென்னை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநருடன் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்பாரா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அமைச்சர் பொன்முடி விழாவில் பங்கேற்றார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை அரங்கில் இன்று (செப். 23) முற்பகல் நடை பெற்றது. இந்த விழாவுக்கு  பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார்.   இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரும், மும்பை ஹோமிபாபா தேசிய நிறுவனத்தின் வேந்தருமான அனில் ககோட்கர் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினார். இதில், அமைச்சர் பொன்முடியும் கலந்துகொண்டு சிறப்பு ஆற்றினார்.

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஒரு வருட காலமாகவே, துணைவேந்தர்  நியமிக்கப்படாமல் ஆட்சி மன்ற குழுவால் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பேராசிரியர்கள் போராட்டம் காரணமாக பட்டமளிப்பு விழா நடைபெறுமா என்று கேள்வி எழுந்த நிலையில், பட்டமளிப்பு விழா குறித்து அறிவிக்கப்பட்டு, இன்று வெற்றிகரமாக மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.