சிவகங்கை: கீழடியை தொடர்ந்து பொற்பனைக்கோட்டை அகழாய்வு தொடங்கி உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கீழடி உள்பட பல இடங்களில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான அகழ்வாய்வு பணிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நடைபெற்று வருவதாகவும், தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறையை பறைசாற்றும் அரிய பொருட்கள் கிடைத்துள்ளதாகவும்,  தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று பேராசிரியர்களும் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை அருகே உள்ள சங்க காலத்தைச் சேர்ந்த தமிழர்களின் தொன்மையின் சின்னமாக கருதப்படும் பொற்பனைக்கோட்டையை தொல்லியல் அகழாய்வு செய்யவும் அரசு அனுமதி வழங்கியது. இங்கு  சங்ககால தொன்மை மிக்க கொத்தளங்கள், அகழிகள் உள்ளன. கோட்டை சுவரில் 4 இடங்களில் வாசல்கள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், பல்வேறு இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு அகழ்வாய்வு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜூன் மாதம்  25ம் தேதி அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் முன்னிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து நவீன தொழில்நுட்பக் குழுவினர் பொற்பனைக்கோட்டையில் பல்வேறு இடங்களில் ஜிபிஆர் எனும் கருவி மூலம் மின்காந்த அலையை மண்ணுக்குள் செலுத்தி சோதனை செய்தனர்.  அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில்,  இன்று அகழ்வாய்வு பணியினை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர், , “எனது தொகுதிக்குட்பட்ட பொற்பனைக் கோட்டையில் அகழ்வாய்வு செய்வதில் பெருமை அடைகிறேன். இங்கு தமிழர்களின் தொன்மை வாய்ந்த வாழ்வியல் சின்னங்கள் புதைந்து கிடக்கலாம். கீழடி, பொற்பனைக் கோட்டை என பிரித்து பார்க்காமல் இவை அனைத்தும் தமிழர்களின் ஒட்டுமொத்த வரலாற்று சின்னங்களாக பார்க்கவேண்டும். பொற்பனைக் கோட்டையில் தொல்லியல் ஆய்வு செய்வதற்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று செய்யப்படும். தேவைப்பட்டால் நிதி ஒதுக்கீடும் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.