சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மேகதாதுவில் பூமி பூஜை போட நடவடிக்கை எடுத்து வருகிறது அக்கட்சிக்கு எங்கிருந்து தைரியம் வருது ? என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் அரசு காங்கிரஸ் தயவில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “திடமான” நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேகதாது அணையை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என கூறிய கர்நாடக துணை முதல்வருக்கு எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார். டி.கே.சிவகுமார் பேச்சு தமிழ்நாடு விவசாயிகள், பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi palaniswami) தனது எக்ஸ் பக்கத்தில், “மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை” என்று கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும், அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், ஆட்சி மாறினும் மாறாத காட்சியாகவே உள்ளது.
தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் அரசு காங்கிரஸ் தயவில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “திடமான” நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா?
மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது ?
தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா? காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி நதிநீர் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதாரம் ஆகும். டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரியாறு விளங்கி வருகிறது. மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்.
காவிரி தொடர்பாக தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருநாளும் அனுமதிக்காது. கர்நாடக துணை முதல்வரின் இப்பேச்சு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக எடுப்பதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை
காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 114.57 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும்.
மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை பாலைவனமாகிவிடும் என்பது சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க முயன்றபோது, தமிழ்நாடு அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் பாதிக்கப்படும் என்பது தமிழகத்தின் பிரதான வாதமாகும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
[youtube-feed feed=1]