உறவுகள் – கவிதை பகுதி 12
மேகக் காதலன்
பா. தேவிமயில் குமார்
வீடு கொடுத்த எனக்கு உன்
வீட்டில் இடம் கொடுக்காதது ஏன் ?
படிக்க ஏடு கொடுத்தேன், என்னை
ஏட்டுச் சுரைக்காய் ஆக்கியதேன் ?
இசைக்கருவிகளை கொடுத்த எனக்கு
இரங்கற்பா பாடியதேன் ?
உங்களுக்காகவே வாழும் எனை
ஓங்கி வெட்டியது ஏன் ?
காயும் கனியும் கொடுத்த என்னை
கரிக்கட்டையாய் ஆக்கியதேன் ?
நிழல்தானே கொடுத்தேன், பின் ஏன்
நெடுஞ்சாலைகளில் வீழ்த்தினீர்கள் ?
எழுது பொருட்கள் கொடுத்த என்னை
எழுதுவதோடு நிறுத்தியதேன் ?
மருந்துப் பொருட்கள் கொடுத்த எனக்கு
மரணத்தைக் கொடுப்பதேன் ?
தென்றலைக் கொடுத்த எனக்கு
திதி கொடுப்பதேன் ?
விலங்குகளே என் வாழ்வின் அடையாளம்
விளங்கியது இப்போது,
யார் உண்மையான விலங்கென்று !
என்னில் பாட்டிசைத்த பறவைகள்
என்னைக் காணாமல் தவிக்கிறது !
பிராண வாயுவை தந்த என்
பிராணத்தை எடுப்பதேன் ?
நன்றி கெட்ட மனிதர்கள் !
என்னைத் தேடி என் மேகக் காதலன்
அலைகிறான் !
நான் இல்லாத இடத்தில் ஒரு
நாளும் அவன் இருப்பதில்லையே !
எங்களை வெட்டிசாய்த்து விட்டு
எதைத் தேடி செல்கிறீர்கள் ?
இளைப்பாறவா ?
இயற்கையை பார்க்கவா ?
தேனெடுக்கவா ?
தென்றல் காற்றை ரசிக்கவா ?
மழை மேகத்தையா ?
மலை அருவியையா ?
இப்படியேப் போனால்,
இனி நி(நீ)லப்பந்து
கரும்பந்தாகட்டும் !
இந்த யுகம் முடிந்து
இன்னொரு யுகம் ஆரம்பிக்கட்டும் !
கண்ணீருடன்
மரங்கள்