புதுச்சேரி: புதுச்சேரி காரைக்காலில் உள்ள ஜிப்மர் மையங்களில் எம்பிபிஎஸ் வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது,

“புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மையங்களில் படிக்கும் எம்பிபிஎஸ் படிப்பில் கடந்த கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதிமுதல் வகுப்புகள் தொடங்க உள்ளது. இதேபோல் பி.எஸ்சி., நர்சிங் முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள், பி.எஸ்சி துணை மருத்துவ மாணவர்களுக்கும் ஜூலை 1ஆம் தேதிமுதல் வகுப்புகள் தொடங்க உள்ளது.

வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கொரோனா சோதனைக்கு பிறகு ஜிப்மர் வளாகத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற மாணவர்கள் நேரடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கு செல்லலாம்.

வகுப்புகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல், வகுப்புகளிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவார்கள்.

எம்பிபிஎஸ் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.