சென்னை: தமிழ்நாட்டில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 29 வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று மாலையுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, , எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 29.6.2025 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வகையில், விண்ணபத்திற்கான அவகாசம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இதைத் தவிர சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்கள் என அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன. பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி நிகழாண்டில் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இணையவழியே விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் (ஜூன் 25) நிறைவடையிருந்த நிலையில், வரும் ஜூன் 29 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து, மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நிகழாண்டில் நீட் தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. கால அவகாசம் அதிகமாக இருப்பதால் இந்த முறை விண்ணப்பப் பதிவு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.