சென்னை: ‘தமிழர் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கள் திருநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து, மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், புதுமை பொங்க, இனிமை தங்க, செல்வம் பெருக, வளமை வளர, அனைவருக்கும் எங்களது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாள்கள் விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும்.

தை முதல் நாளன்று புதுப் பானையில் அரிசியிட்டு, ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பி, இறைவனை வணங்கி அனைவரும் ஒன்றுபட்டு, வேற்றுமைகளை மறந்து உள்ள அச்சமின்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், புதுப் பானையில் உள்ள நற்பொங்கல் போன்று நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும், வளமும் பெறும்.

பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லது அல்லும் பகலும் அயராது பாடுபட்டுவரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள்.

இத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட ஜெயலலிதாவும், அதனைத் தொடர்ந்து அதிமுக அரசும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி, சீரிய முறையில் செயல்படுத்தின என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர விரும்புகிறோம்.

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்; நலமும் வளமும் பெருகட்டும்; அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும்; கடினமான உழைத்துவரும் நம் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, எங்களுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்”.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.