சென்னை: வணிகர்கள் தினத்தை முன்னிட்டு மே 5ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுராந்தகத்தல் நடைபெறும் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையிலான வணிகர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

வணிகர் தினத்தையொட்டி, மே 5ந்தேதி தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்கர்கள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி கொண்டாடி வருகின்றனர். அதன்படி நடப்பாண்டும், வணிகர்கள் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநாடு நடைபெறுகிறது. மறைந்த வெள்ளையன் தலைமையிலான வணிகர்கள் சங்கை பேரவை சார்பில், மே 5-ந்தேதி வணிகர் தின மாநாடு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. அதுபோல விக்கிரமராஜா தலைமயில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மதுராந்தகத்தில் மே 5-ம் தேதி நடைபெறுகிறது. அன்று தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் தலைமையில் பெரம்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பொது செயலாளர் ராகவேந்திரா மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொருளாளர் ஹரிகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் இமானுவேல் ஜெயசீலன், தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிச்சா ரமேஷ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.எஸ்.அந்தோணி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வருகின்ற மே 5-ந்தேதி வணிகர் தின மாநாடு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாடு ‘வணிகம் காக்க வெள்ளையன் இளைய தலைமுறை எழுச்சி மாநாடு’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது. தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு பின்னர் எனது தலைமையில் செயல்படும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து முதன் முதலாக என்னுடைய தலைமையில் நடத்த இருக்கும் முதல் மாநாடு என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநில, மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்தோடு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்றார்.

அதுபோல, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணிகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் தின மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 42-வது வணிகர் தின மாநில மாநாடு செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகத்தில் மாலை 3.35 மணிக்கு தொடங்குகிறது. சுமார் 29 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. போதிய வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இம்மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். வணிகளின் நலனைக் காக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும், வணிகர்களின் அத்தியாவசிய கோரிக்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டு தீர்வுகாணப்பட உள்ளன.
மாலையில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து வணிகர்களுக்கும் மாலை சிற்றுண்டி, இரவு உணவு, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வணிகர் தின மாநாட்டை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள் மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள், சந்தைகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் விடுமுறை விடப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.