சென்னை:  நீட் தேர்வுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள அரசு சார்பில் 128 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள  நீட் பயிற்சி மையங்களில் , மாணவர்களுக்கு காலை, மதியம் இலவச உணவுடன் இன்றுமுதல்  முழுநேர  நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 5-ந்தேதி நடை பெறவுள்ளது.  இதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இந்த தேர்வை அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில்  பள்ளிகளில் இலவச நீட் பயிற்சி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடும் அமல்படுத்தப்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் பயற்சி வழங்குவது நிறுத்தப்பட்டது. இது கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டு நீட் தேர்வு எழுத,  மாநிலம் முழுவதும்,  அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இதில் அதிக பட்சமாக சேலம் மாவட்டத்தில் 969 மாணவா்களும், சென்னையில் 827 மாணவா்களும், திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 730 மாணவா்களும் விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெற்று வருகிறது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மையங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடங்களிலும் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சுழற்சி முறையில் பாடங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களிலும் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீா் மற்றும் மதிய உணவு மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தேர்வுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், முழுநேர பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  பயிற்சி மையங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும் என்றும், பயிற்சிக்கு வரும் மாணாக்கர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.