டோக்கியோ

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் தேசியக் கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை மாரியப்பன் இழந்துள்ளார்.

டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெற்றது  இதில். 54 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஈட்டி எறிதல் வீரர் டெக் சந்த் தலைமையேற்று தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். முதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்து..

மாரியப்பன் உள்ளிட்ட இந்திய அணியினர் டோக்கியோவுக்குச் சென்ற விமானத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையொட்டி அந்த பயணியின் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்தவர் என்ற வகையில் மாரியப்பன், வட்டு எறிதல் வீரர் வினோத்குமார் உள்பட 6 இந்தியர்கள் விளையாட்டு கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 6 நாட்கள் மாரியப்பனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதைக் குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது.   ஆயினும்க் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொடக்க விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று பாராலிம்பிக் கமிட்டியினர் அறிவுறுத்தினர்.

மாரியப்பனுக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் மறு அறிவிப்பு வரும் வரை தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக் தொடக்க விழாவில் மாரியப்பன் பங்கேற்க முடியாவிட்டாலும் போட்டியில் கலந்து கொள்வதில் சிக்கல் இருக்காது எனக் கூறப்படுகிறது.