மும்பை

காராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராகக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார் என சரத்பவார் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா – பாஜக கூட்டணி வென்றது.  பாஜக முதல்வர் பதவியை விட்டுத் தர மறுத்ததால் கூட்டணி உடைந்தது.  இதையொட்டி அதே ஆண்டு நவம்பர் மாதம் சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது .

இந்த கூட்டணியின் ஒப்பந்தப்படி சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அக்கட்சியைச் சேர்ந்த நானா படோல் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.  கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டதால் அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது அந்த பதவிக்குக் கூட்டணியில் எந்த கட்சியைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்படுவார் எனக் கேள்வி எழுந்தது.  இந்த கேள்விக்குப் பதிலாக, “காங்கிரஸ்  கட்சியை சேர்ந்தவர் புதிய சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவார்   காங்கிரஸ் தேர்வு செய்யும் நபரை மற்ற கூட்டணிக் கட்சிகள் ஏற்கும்” எனத் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.