காலாசவுக்கி, மகாராஷ்டிரா

திருமணத்தன்று மணக்க மறுத்து விட்ட பெண்ணிடம் திருமணத்துக்கு செய்த செலவை திருப்பித் தருமாறு மணமகன் வழக்கு.

காலாசவுக்கி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் காம்ப்ளி.  இவருக்கும் பூஜா பண்டாரி என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு மணமகளுக்காக மண்டபத்தில் காத்திருந்தார் ஸ்ரீகாந்த்.   மணப்பெண் வரவே இல்லை.

ஏமாற்றம் அடைந்த ஸ்ரீகாந்த் காலாசவுக்கி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.  அதில் தான் இரண்டு மாதங்களாக திருமணத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும், இதுவரை தான் செலவழித்த ரூ 2 லட்சத்தை மணமகள் பூஜா திருப்பித் தரவேண்டும் எனவும் குறிப்புட்டுள்ளார்.

இதை தொடர்ந்து போலீஸ் பூஜாவின் மேல் மோசடிக் குற்றம் பதிவு செய்துள்ளது.  ஆனால் இதுவரை பூஜா கைது செய்யப்படவில்லை.  விரைவில் கைது செய்யப்படுவார் என டிபுடி கமிஷனர் அம்பிகா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பூஜா திடீரென காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்.  தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை எனவும் தனது பெற்றோர்கள் தான் ஸ்ரீகாந்தை மணம் முடிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.  தற்போது பூஜா தனது வீட்டை விட்டு வெளியேறி தனது காதலருடன் வசிப்பதாக தெரிய வந்துள்ளது.