சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி,  தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன்படி இன்றுமுதல் 27ந்தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது. கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி இன்று முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா உலகப்புகழ் பெற்றது.  நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்  நடப்பாண்டு கார்த்திகை தீப திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 17-ம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், தீப திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.   நாளை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபமும் ஏற்றபட உள்ளது.

இ ந்த மகா தீப தரிசனத்தை காண 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதையொட்டி தெற்கு ரயில்வே இன்று முதல் நவ.27 வரை 10 சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள், சென்னை மட்டுமின்றி,  வேலூர், திருவாரூர், தாம்பரத்திலிருந்து தி.மலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும்  நவ.26ல் திருச்சி – வேலூர் இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மகா தீபத்தை ஒட்டி  திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  டிஜிபி தலைமையில் 14,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கிரிவல பாதையில் 50 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 75 கார் நிறுத்தும் இடங்கள், 14 பேருந்து நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…