மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் நலமுடன் இருப்பதாக மதுரை அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். இந்த சாதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மருத்துவர்களை பத்திரிகை டாட் காம் இணையதளம் பாராட்டுகிறது.

தமிழ்நாட்டில் 2008 முதல் நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. கடந்த 2023 வரை 9% உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிகிச்சைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவலை சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டடிருந்தது. ஆனால், தனியார் மருத்துவமனையில், 10,000-க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்ததும் தெரிதய வந்தது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சென்னை அரசு மருத்துவமனை உள்பட மாவட்ட தலைநகர்களில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வநத்து. அதன்படி சென்னை அரசு மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து மொத்தம் 2000க்கும் மேற்பட்ட உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையின் பிரபல அரசு மருத்துவமனைகளான சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனை, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றன. மேலும் கோவை, மதுரை அரசு மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதன்முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருப்ப மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் ஆயுதப்படை காவலர் மோகன்குமார் என்பவர், ஜனவரி 30ஆம் தேதி, தன் வீட்டின் அருகே வளர்ந்திருந்த மரத்தை வெட்டும் போது தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, மோகன்குமார் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி அவரது மனைவி யோகலட்சுமியின் ஒப்புதல் பெறப்பட்டது.
இதனையடுத்து, அரசு ராஜாஜி மருத்துவமனையில் உறுப்பு தானத்திற்காகக் காத்திருந்த நபர்களுக்கு 1 சிறுநீரகம், கல்லீரல், தோல், எலும்பு, கருவிழிகள் ஆகிவை வழங்கப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் திருச்சி தென்னூரிலுள்ள காவேரி மருத்துவமனைக்கும், இதயம் சென்னையிலுள்ள எம்ஜிஎம் மருத்துவ மனைக்கும் கொண்டு செல்லப்பட்டன.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்ட கல்லீரல், 42 வயதான ஆண் நோயாளிக்கு பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை பிப்ரவரி 06 நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தானம் பெற்ற நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய, அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் அருள் சுந்தரேஸ்குமார், “தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்து முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் உடல் உறுப்பு தானக் கொள்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசின் உதவியால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. மேலும், காவலர் மோகன்குமாரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகம், 22 வயதான நோயாளிக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழுவால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற காரணமாக இருந்த அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர்களான, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் எஸ்.பத்மநாபன், எஸ்.கார்த்திகேயன், ஏ.சாஸ்தா, ஆர்.வில்லாளன், எஸ். பாலமுரளி, எம்.கண்ணன், ரமணி, மயக்கவியல் மருத்துவர்கள் கல்யாண சுந்தரம், வைரவராஜன், சண்முக சுந்தரம், செந்தில் குமார், பாலமுருகன், ரமேஷ், பிரமோத், முரளி, செவிலியர்கள் ஜோதி, விஜயலட்சுமி, CMCHIS ஊழியர் சித்ரா, ரத்த வங்கி மருத்துவர் சிந்தா ஆகியோரை பாராட்டுவதாகவும் கூறினார்.