சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தலைவர் எம். அப்பாவு மீது அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அளித்த கிரிமினல் அவதூறு தனிப்புகார் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் எம்.அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இதனால் அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய சட்டப்பேரவை தலைவர் எம்.அப்பாவுக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை தொடரும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.