டெல்லி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மகேந்திர சிங் தோனி, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான நட்சத்திர வீரர் தோனி, கடந்த 15ந்தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  அவரைத் தொடர்ந்து  மற்றொரு நட்சத்திர வீரரான சுரேஷ்ரெய்னாவும் தனது ஓய்வுமுடிவை அறிவித்தார். இது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தோனி, மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேண்டும்  சுப்பிர மணிய சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  “எம்.எஸ்.தோனி கிரிக்கெட்டில் இருந்துதான் ஓய்வு பெற்றாரே தவிர வேறு எதில் இருந்தும் அல்ல. முரண்பாடுகளுக்கு எதிராக போராடும் அவரது திறமையும், கிரிக்கெட் அணியில் நிரூபிக்கப்பட்ட அவரது எழுச்சியூட்டும் தலைமையும் பொதுவாழ்க்கைக்கு தேவைப்படுகிறது. அவர் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் போட்டி யிடவேண்டும்” 

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.