லண்டன்
காபித்தூள் சக்கையில் இருந்து வாகன எரிபொருள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
உலகெங்கும் காபிப் பிரியர்கள் அதிக அளவில் உள்ளனர். காபி தயாரிக்கப்பட்டபின் அந்த காபித்தூளின் சக்கை குப்பையில் கொட்டப் பட்டு வீணாக்கப்படுகிறது. லண்டனில் காபிப் பிரியர்கள் அதிகம் உள்ளதால் அங்கு இந்த காப்பித்தூளின் சக்கைகள் நிறைய சேர்ந்து விடுகின்றன. லண்டனில் உள்ள மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 2.5 கோப்பை காப்பி அருந்துகின்றனர். அதனால் ஒரு வருடத்துக்கு காபித்தூள் சக்கை சுமார் 2 லட்சம் டன்கள் வரை குப்பையில் கொட்டப் படுகிறது.
அதை உபயோகப்படுத்த லண்டனை சேர்ந்த பயோ பீன் என்னும் நிறுவனம் ஒரு பரிசோதனை நிகழ்த்தியது. அந்த சக்கைகளில் மீதேன் மற்றும் கார்பன் டை ஆக்சைட் எடுக்க முடிகிறது. அதை உபயோகப் படுத்தி வாகனங்களுக்கான எரி பொருளை இந்த நிறுவனம் கண்டு பிடித்துள்ளது. இந்த எரிபொருளை டீசலுடன் கலந்து வாகனங்களில் நிரப்பி பரிசோதனை செய்யப் பட்டுள்ளது.
இதில் 80% டீசலுடன் 20% இந்த புதிய எரிபொருள் கலந்தால் வாகனங்களில் இருந்து வரும் புகையின் நச்சுத்தன்மை 10 முதல் 15% குறைந்து காணப்பட்டுள்ளது. இதை உபயோகிக்க தற்போதுள்ள வாகன எஞ்சின்களில் எந்த ஒரு மாறுதலும் செய்யத் தேவை இல்லை. அதிகம் காப்பிப் பிரியர்கள் உள்ள நாடான ஃப்ரான்ஸில் இந்த எரிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவ பயோ பீன் நிறுவனம் உத்தேசித்துள்ளது.