சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுகுறித்து தமிழழுக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது என தலைமைச்செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறையத்தொடங்கி உள்ளது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொற்று குறைந்தாலும், சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 651 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 1,971 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 33 ஆயிரத்து 646 நபர்கள் கொரோனாவால் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 463 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துளளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 26 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீடிக்க மருத்துவ  வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தேவை என்று மருத்துவ குழு முதல்வருக்கு பரிந்துரை அளித்துள்ளது. ஆனால், ஊரடங்கு மட்டுமே தீர்வாகாது என ஸ்டாலின் கூறி வருகிறார். இதுதொடர்பாக நேற்று சுகாதாரத்துறையினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்

இதையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது