சென்னை:
மிழ்நாட்டில் நடைபெற இருக்கும்  உள்ளாட்சி தேர்தலை அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தமிழ்நாடு தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினர்.
உள்ளாட்சி தேர்தல் வருகிற 17, 19-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.சுமார் 1 லட்சத்துக்கும் மேலான உள்ளாட்சி பதவிகளுக்கு 4 லட்சத்து 97 ஆயிரத்து 840 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்த தேர்தலில் கிராம பகுதி களில் வாக்கு சீட்டு முறையிலும், நகர்ப்புறங்களில் மின்னணு வாக்கு எந்திரம் முறையிலும் பின்பற்றப்படுகிறது.
தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் கமி‌ஷனர் சீத்தாராமன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான பாதுகாப்பு ஏறபாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்த நிலையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று காலை 11 மணி அளவில்  நடந்தது.  கூட்டத்துக்கு கமி‌ஷனர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், தேர்தல் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்  அங்கீகரிக்கப்பட்ட அனைத்துரு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை, தி.மு.க. சார்பில் சட்டத்துறை செயலாளர இரா.கிரிராஜன், காங்கிரஸ் சார்பாக பீட்டர் அல்போன்ஸ், தாமோதரன், தே.மு.தி.க. சார்பில் செந்தாமரை கண்ணன், பா.ஜனதா சார்பில் சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஏழுமலை, மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் செல்வசிங்,  தேசியவாத காங்கிரஸ் சார்பில் சாரதி, அபுபக்கர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாரதிதாசன், சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் சுமுகமாக நடைபெற கருத்துகளை கூறினார்கள். இறுதியில் பேசிய தேர்தல் கமிஷனர் சீத்தாராமன்,  தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அனைத்து கட்சிகளையும்  கேட்டுக் கொண்டார்.