டெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

கொரோனா காலத்தில் வங்கிக்கடன் பெற்றவர்கள், அதனை திருப்பி செலுத்தும் அவகாசம், மார்ச் முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்தது. அந்த தருணத்தில் வட்டியை கட்டாமல், ஒத்திவைப்பு சலுகையை பெற்றவர்களுக்கு கூடுதல் வட்டி விதிக்கப்பட்டது.

வட்டிக்கு வட்டி என்பதை தள்ளுபடி செய்ய கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் விசாரணை முடிநது கடந்தாண்டு டிசம்பர் 17ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி நீதி மன்றம் கூறி இருப்பதாவது:

கொரோனா காலத்தில் 2020 மார்ச் 31 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை வங்கி கடன் பெற்றவர்கள் அதனை திருப்பி செலுத்த அளிக்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்படாது. கடனுக்கான வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்யுமாறு வங்கிகளுக்கு உத்தரவிடுங்கள் என்று மத்திய அரசை கேட்டு கொள்ளவும் முடியாது.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை சார்ந்த எடுக்கும் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவித்து உள்ளது.