சென்னை:   விகடன் இணையதளத்தை மத்தியஅரசு முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,  சம்பந்தப்பட்ட கார்ட்டூன்களை தடை  செய்யுமாறு  விகடன் நிறுவனத்துக்கு  அறிவுறுத்தியதுடன், இணையதளம் முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இந்திய நாட்டின் பிரதமரான   நரேந்திர மோடி தொடர்பாக, அவரை இழிவாக காட்டும் வகையில், பல்வேறு கார்டூன்களை ஆனந்த விகடன்  வெளியிட்டிருந்தது.  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியிடப்பட்டது. இது பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மத்தியஅரசுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார். அதன்பேரில்,  கார்ட்டூன் விவகாரத்தில் விகடன் இணையதளம் பிப்ரவரி 15 ஆம் தேதி முடக்கப்பட்டது. தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது..

இதனை எதிர்த்து விகடன் குழுமம் சார்பில்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது,  ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார். இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிரானது என வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட கார்ட்டூன்களை பிளாக் செய்யுமாறு நிறுவனத்துக்கும் அறிவுறுத்தியதுடன்,  இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.