சென்னை: ”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானார். அவரது மறைவையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று (ஜூலை 4) காலமானாா். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த வா.மு.சேதுராமன், சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் உள்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளாா். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளைப் பதிப்பித்தவா். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்தவா். இவருக்கு பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளுவா் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனாா் மூத்த தமிழறிஞா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா். அவா் விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். அவருக்கு மகன்கள் வா.மு.சே. திருவள்ளுவா், வா.மு.சே. கவியரசன், வா.மு.சே. ஆண்டவா், வா.மு.சே.தமிழ் மணிகண்டன், மகள் வா.மு.சே. பூங்கொடி ஆகியோா் உள்ளனா். மறைந்த வா.மு.சேதுராமன் இறுதிச் சடங்கு சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது!
இன்றுகூட முரசொலியில், “ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம்!” எனக் கவிதை தீட்டியிருந்த அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதைச் சிந்தை ஏற்க மறுக்கிறது.
“தமிழ் தமிழ் தமிழ் என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்திருக்கின்ற ஒரு பெருமகனைக் காண வேண்டுமென்றால், அது பெருங்கவிக்கோ சேதுராமனைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட பெருந்தகை அவர்!
தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சிறப்பு சேர்த்த செந்தமிழ்ச் செம்மல்.
தமிழ்ப்பணிக்கெனத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட அந்தத் தியாகச் சுடர் தனது ஒளியை நிறுத்திக் கொண்டு, வேதனை எனும் இருளில் நம் மனதைத் தவிக்கவிட்டிருக்கிறார்!
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களது புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்!
அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் – உறவினர்கள் – தமிழ்கூறு நல்லுலகின் சான்றோர்கள் – தமிழ்த் தொண்டர்கள் என அனவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.