டில்லி

த்திய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்க்கத் துப்பாக்கி சுடும் வீராங்கனையிடம்  அமைச்சர் ஸ்மிரிதி இரானி லஞ்சம் கேட்ட வழக்கு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைக் கவனித்து வருகிறார்.  சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை ரித்திகா சிங் இடம் மத்திய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக்க ஸ்மிரிதி ரூ.1 கோடி லஞ்சமாகக் கேட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கை ரித்திகா சிங் உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு மனுவில் ரித்திகா சிங், “மத்திய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை எனக்கு வாங்கித் தர மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி தனது உதவியாளர் விஜய் குப்தா மூலம் ரூ.1 கோடி லஞ்சம் கேட்டார்.  இதில் மருத்துவர் ரஜ்னீஷும் உள்ளார்.  இவர்கள் அதன் பிறகு அதை ரூ.25 லட்சமாக குறைத்தனர்.  போலி நியமனக் கடிதம் என்னிடம் அளித்து பணத்தைக் கேட்டனர்.  இவர்களில் ஒருவர் என்னிடம் ஆபாசமாகப் பேசினார்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு ஸ்ம்ரிதி இரானியின் சட்ட ஆலோசகர், “பத்திரிகைகளில் நாம் ஜோடிக்கப்பட்ட வழக்குகளைப் பற்றிப் படிப்போம்.  அதைப் போல் அமைச்சர் மீது இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.  வினோதமான பொய்களைக்கொண்டு இந்த வழக்கு சர்வதேசத் துப்பாக்கி சுடும் வீராங்கனை ரித்திகா சிங் தொடர்ந்துள்ளார்.

இது மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் புகழுக்குக் களங்கம் விளைவிக்க அரசியல் சக்திகளால் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முயற்சி  ஆகும். ஏற்கனவே பல மோசடிகள் செய்துள்ள குற்றவியலில் நன்கு பழக்கப்பட்டுள்ள நபரால் தொடரப்பட்ட இந்த வழக்குக்குப் பின்னால் பெரிய அரசியல் சதி உள்ளது.  அமைச்சர் இந்த வழக்கில் சரியான சட்ட உதவிகளுடன் நீதி பெறுவார்” எனக் கூறி உள்ளார்.