சென்னை: வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி,  புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

வெம்பக்கோட்டை அகழ்வாய்வில்,  சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளது. இது ஆச்சரித்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை முன்னிலைப்படுத்தி  தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு  ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அவரது, பதிவில், விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும், முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.