டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதிய, ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டியை பதவியிலிருந்து நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த சமீபத்தில், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான ரமணா குறித்து,  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்குக் கடிதம் எழுதி யிருந்தார். அதில், ‘மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளை , மூத்த  டி.எஸ்.ரமணா கட்டுப்படுத்துகிறார் என்றும் முன்னாள் முதல்வர் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்’  குற்றச்சாட்டு கூறியிருந்தார். ஆந்திர முதல்வரின் முதன்மை ஆலோசகர் அஜய கல்லம் வெளியிட்ட கடிதத்தில்,’ நீதிபதி ரமணா, ஆந்திர உயர்நீதிமன்ற அமர்வுகளில் செல்வாக்கு செலுத்தி வருகிறார். உயர்நீதிமன்ற வழக்குகளை ஒதுக்கீடு (ரோஸ்டர்) செய்வதிலும் அவரின் செல்வாக்கு காணப்படுகிறது’ என்று குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, சிபிஐ விசாரணைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், டெல்லி பார் அசோசியேஷனும்,  ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும்,  இது நீதித்துறையை அச்சுறுத்தும் செயல் என்றும், நீதிமன்ற அவமதிப்புக்கு சமமானது என்றும் அது தெரிவித்தது.

இந்நிலையில்,  வழக்கறிஞர்கள்  ஜிஎஸ். மணி, பிரதீப் யாதவ் ஆகிய இருவரும், உச்சநீதிமன்ற நீதிபதி மீது குற்றம் சுமத்தியுள்ள ஜெகன்கமோனை ஆந்திர முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அவர்களது மனுவில்,  ”ஊழல், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்பட 20 கிரிமினல் வழக்குகள் ஜெகன்மோகன் ரெட்டி மீது நிலுவையில் உள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான ஜெகன்மோகன் ரெட்டி, எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். அவரை உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டைக் கூறி நீதித்துறைக்கு மக்கள் மனதில் பெரும் களங்கத்தை ஜெகன்மோகன் உருவாக்கியுள்ளார் என்றும், இதுகுறித்து,  ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும். அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.