இந்தி நடிகை கங்கனா ரணாவத், தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து, வீண் வம்பை விலைக்கு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனால் அவர் மீது மும்பை போலீஸ் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த வழக்கறிஞர் ஹர்ஷவர்த்தன் என்பவர் அங்குள்ள திலக்வாடி காவல் நிலையத்தில், கங்கனா மீது புகார் அளித்துள்ளார்.

“டெல்லியில் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல் சித்தரித்து கங்கனா, தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார், எனவே கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள வழக்கறிஞர் ஹர்ஷவர்த்தன், “நடிகை கங்கனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யா விட்டால் நீதிமன்றம் செல்வேன்” என தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி