ராணிப்பேட்டை: தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் மின்தடை காரணமாக தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வெவ்வேறு மாநிலங்கள் சென்றது. அதிமுக அரசு பொறுப்பேற்ற போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசில் மின் தடை இல்லாத மாநிலமாக உருவானது. 25 சதவீதம் தொழில் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற, நகர்ப்புறங்களில் வசிக்கும் அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது. அரக்கோணத்தில் பாதாளச் சாக்கடை திட்டப் பணி முடிந்துள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு தந்தது.

ஏழை மக்கள் திமுக ஆட்சிக் காலத்தில் எந்த நலனும் பெறவில்லை. 70 வயது முடிந்த பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் மீது அக்கறை கொள்கிறார். பெட்டி வைத்து குறைகள் கேட்பவர் ஸ்டாலின். 100 ஆண்டுகள் அதிமுக அரசு தான் நிலைக்கும். எனவே, ஸ்டாலின் பெட்டி வைத்து குறை கேட்பது வேடிக்கையாக உள்ளது.

52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 26 அம்மா மினி கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என்று பேசினார்.