கொழும்பு:

லங்கையில் புதிய அமைச்சரவை நாளை (செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கும் என்று  அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து அரசு அமைத்து இருந்தன. அங்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் புதிய கட்சி பெருவாரியான இடங்களில் வென்றது.

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு பிரதமர் ரணில் மறுத்துவிட்டார். இதனால் அரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பிரதமருக்கு எதிராக, ராஜபக்சே ஆதரவு பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த மாத ஆரம்பத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை முறியடித்து பிரதமர் வெற்றி பெற்றார். இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது அதிபர் சிறிசேனாவின் கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்கள் உள்ளிட்ட சில எம்.பி.க்கள் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக வாக்களித்தனர். எனவே இந்த அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி அதிபரை வலியுறுத்தியது.

அதன்படி இந்த அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதிலாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த பரபரப்பான சூழலில் அரசியல் சட்டம் 70–வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா தற்காலிகமாக முடக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக புதிய அமைச்சர்களின் பட்டியல் தற்போது இறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய அமைச்சரவை நாளை (செவ்வாய்க்கிழமை) பதவியேற்க இருப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கை அரசில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வரும் என்று அரசியில் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.