
பஞ்சாப்,
பஞ்சாப் மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக 9 பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரமான சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள பூகி கிராமத்தில், பஞ்சாயத்து மூலம் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்டு வரக்கூடிய நிலம் தனக்கு சொந்தமானது என்று நிர்மல் சிங் என்பவர் எதிர்ப்பு தெரிவிந்து வந்துள்ளார்.
ஆனால், பஞ்சாயத்து அரசு நிலம் என்று கூறி மக்கள் தேவைக்காக சமுதாய நலக்கூடத்தை கட்ட ஆரம்பித்தது. இந்த கட்ட வேலையில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் நிர்மல் சிங், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர், இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது, இங்கு கட்டடம் கட்டக்கூர்து என கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த நிர்மல்சிங், அவரது மனைவி மகள் ஆகியோர் சேர்ந்து வேலை செய்துவந்த பெண் தொழிலாளர்கள் மீது ஆசிட் வீசினர்.
இந்த திடீர் ஆசிட் வீச்சால் அந்த பகுதி பரபரப்பானது. ஆசிட் வீச்சில் காயமடைந்த பெண்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஆசிட் வீச்சில் 9 பெண்கள் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் அந்த கிராம பஞ்சாயத்து தலைவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel