குவைத்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அந்த நாட்டு அரசு  அறிவித்துள்ளது.

வேலை தேடி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் குவைத் நாட்டிற்கு வருகிறார்கள். இவர்களில் பலர் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு முறையான அனுமதி இன்றி வந்துவிடுகிறார்கள்.

அதாவது, பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடியுரிமை பெர்மிட்(அக்காமா) உள்ளிட்டவை இல்லாமல் குவைத்தில் தங்கி இருப்பவர்கள் சட்டவிரோத குடியேற்றத்தினர் என்று கருதப்படுகின்றனர். அந்நாட்டு சட்டப்படி இவர்களுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்படும்.

தண்டனைக்குப் பிறகு அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இப்படிப்பட்டோர் பலர் தற்போது, தங்கள் சொந்தநாட்டுக்குத் திரும்ப அந்தந்த நாட்டு தூதரகங்களில் விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.

குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஏராளமானோர் கடந்த இரு நாட்களாக இப்படி இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுவதாக குவைத் அரசு அறிவித்துள்ளது. இவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர்கள் நாட்டிற்குத் திரும்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 22க்குள் அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.