டில்லி,
கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளுக்கான கட்டுமான பணியை நாளை ரஷிய அதிபர் புதினும், இந்திய பிரதமர் மோடியும் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்கள்.
கூடங்குளத்தில் ஏற்கனவே ரஷியா உதவியுடன் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகள் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. முதல் அணு உலையிலிருந்து வணிக ரீதியிலான மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது அணு உலையும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் வணிக ரீதியான மின்சாரம் தயாரிக்கப்படவில்லை.

இதையடுத்து, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தப்படி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-ம் அணுஉலைகளுக்கான சமதளம் போடும் கான்கிரீட் பணிகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரதமர் மோடியும் நாளை காணொலிக்காட்சி மூலம் துவக்கி வைக்க உள்ளனர்.
இதற்கான பூர்வாங்க பணிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் அமைப்பதற்கான அகழ்வு பணிகள் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி துவங்கின. இதற்கான பூமி பூஜைகள் பணிகளும் நடைபெற்றன.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் நாளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அகழ்வு பணிகள் முடிவுற்ற இடத்தில் சமதளமாக்க கான்கிரீட் போடக் கூடிய பணியை நாளை மதியம் சுமார் 1 மணி அளவில் துவக்கி வைக்க உள்ளனர். இந்த மூன்று மற்றும் நான்காவது அணுஉலைகளை பொறுத்த வரை ரூ.36,747 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்பட உள்ளது.

இதற்கு ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகம் மற்றம் இந்திய அணுமின் உற்பத்தி கழகமும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன. இவர்கள் திட்டத்தின் படி 2022-ம் ஆண்டு முற்றிலும் பணிகள் முடிவடைந்து அந்த ஆண்டே மூன்றாவது அணுஉலையில் மின்உற்பத்தி துவங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.