மாரியம்மன் திருக்கோயில்,உடுமலைப்பேட்டை, கோவை மாவட்டம்

திருவிழா:

பங்குனி – சித்திரையில் 19 நாள் பிரதானம், தீபாவளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, ஆடிவெள்ளி மற்றும் பவுர்ணமி.

தல சிறப்பு:

மாரியம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்.

பொது தகவல்:

பிரகாரத்தில் செல்வகணபதி, செல்வமுத்துக்குமரன், தலவிருட்சத்தின் அடியில் அஷ்டநாக தெய்வங்கள் உள்ளன.

பெயர்க்காரணம்: அரைச்சக்கரவடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் “சக்கரபுரி’ என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் “உடும்புமலை’ என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

கோயில் மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. தல விநாயகரின் திருநாமம் சக்தி விநாயகர்.

பிரார்த்தனை

கண்நோய், அம்மை நோய் தீர, திருமணத்தடை, புத்திரதோஷம், நாகதோஷம் நீங்க வேண்டலாம்.

நேர்த்திக்கடன்:

நேர்த்திக்கடன்: அம்பாளுக்கு அவல், தேங்காய் பூ, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், அன்னதானம் செய்தல், முடிகாணிக்கை செலுத்துதல்.

தலபெருமை:

இத்தல மாரியம்மன் பக்தர்களின் மனக்குறைகளை தீர்க்கும் அம்பாளாக அருள்பாலிக்கிறார்.

மாங்கல்ய மாரியம்மன்: இக்கோயிலில், வருடந்தோறும் மார்கழி திருவாதிரையில், 108 தம்பதியர்களை வைத்து “மாங்கல்ய பூஜை’ நடத்தப்படுகிறது. இப்பூஜையில், அம்மனுக்கு மாங்கல்யம் சாத்தி விசேஷ ஹோமங்கள், பூஜைகள் நடத்தி, பெண்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்படுகிறது.

பூஜை செய்த தாலியை பெண்கள் அணிந்து கொள்வதால், அவர்கள் வாழ்வில் பிரச்னைகள் இன்றி, சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

பல்லாண்டுகளுக்கு முன்பு, பக்தர் ஒருவர் தாம் எங்கே செல்கிறோம் என்ற நினைவே இல்லாமல், தானாகவே வனப்பகுதிக்குள் சென்றார். நீண்ட தூரம் சென்ற அவர் ஓரிடத்தில் நினைவு திரும்பி நின்றபோது, அங்கே சுயம்பு வடிவில் அம்பாள்இருந்ததைக் கண்டார்.

ஊருக்கு திரும்பிய அவர் வனத்தில் அம்பாளைக் கண்டதை மக்களிடம் கூறினார். அதன்பின், மக்கள் ஒன்று கூடி அம்பாள் இருந்ததை வனத்தைச் சீரமைத்து கோயில் எழுப்பினர்.